Home » Posts filed under பண்டிகை
Showing posts with label பண்டிகை. Show all posts
Showing posts with label பண்டிகை. Show all posts
கார்த்திகை விளக்கீடு-தீபத் திருநாள்-Photos&Video
கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும்இ கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள் மீன் பெயர்களால் வழங்கி வந்தனர்.
அந்த நாள் மீன்களில் ஒரு நாள் மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
அந்த நாள் மீன்களில் ஒரு நாள் மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
கார்த்திகை மாதத்தின் பண்டிகைகளில் முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். அதாவது தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும். அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களே பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தத் தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார்.
பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள் என்பது கதை.
இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப் படுகிறது. கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இத்தீபத்திருநாள் திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில்இ தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
இத்திருநாள் முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து மாலை பூஜை முடிந்தபின்னர் அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். சிவன் தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் ஆறு பொறிகளை தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்தைகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும்இ வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பானை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்க வைத்து வழிபடுவர்.
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.
சிவபெருமானின் வடிவங்களில் முக்கியமான ஒன்று அர்த்தநாரீஸ்வர வடிவமும் ஒன்றாகும். சிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்தி பிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார். உடலில் சக்தி இல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்ட சிவபெருமான் சிவனும் – சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள் மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியை விட்டு பிரிந்தார் ஈசன். சிவபக்தரை சோதித்துவிட்டோமே என வருந்திய சக்திதேவி தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாக இருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம் செய்தார்.
தவத்தை ஏற்ற சிவபெருமான் சக்திதேவிக்கு காட்சி தந்து தனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். ஆகவே கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில் அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம் கிட்டும். திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க இயலாதவர்கள் மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
கார்த்திகை தீபதன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்கள். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள். இதனை ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. சிவபெருமானே அனைத்து வடிவங்களிலும் இருக்கிறார் என்பதை இது தெரியப்படுத்துகிறது. மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில்விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஜோதி வடிவமாக காட்சி கொடுத்தது போல் நமக்கும் ஈசன் ஜோதிவடிவமாக காட்சி தருகிறார்.
மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை. நம் இல்லத்தில் கார்த்திகை தீபதன்று அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மன் படத்தை வைத்து கார்த்திகை தினத்தில் தோன்றிய முருகப்பெருமானையும் கார்த்திகை பெண்களையும் மனதால் நினைத்து ஆறு தீபங்கள் ஏற்றி வழிபடவேண்டும் . இந்த ஆறு தீபங்களை ஏற்றுவதற்கு முன்னதாக மஞ்சளில் விநாயகரை பிடித்து பூஜிக்க வேண்டும். பிறகு மாவிளக்கு தீபம் ஏற்றிய பிறகு வீட்டின் வெளிபுறத்திலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு அரிசிபொரியை வைத்து அர்த்தநாரீஸ்வரரை மனதால் நினைத்து வணங்க வேண்டும். இதனால் சிவ-சக்தியின் அருளாசி நமக்கும் நம் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்து சகல நலங்களோடு சுபிச்சமான வாழ்க்கை அமையும்.
கார்திகை மாதம் முழுவதும் தீபம் வீடுகளில் தீபம் ஏற்றுவது. சிறப்பாகும். முடியாத பட்சத்தில் பரணி, கார்த்திகை, ரோகிணி மூன்று நாட்கள் மட்டுமாவது தீபமேற்றுவது சிறப்பாகும். அதாவது கார்த்திகை தீப நாளிற்கு முதல்நாள், கார்த்திகை தீபத்தன்று, கார்த்திகை தீபத்திற்கு அடுத்தநாள். வீட்டின் தலை வாசலில், கொல்லைபுற வாசலில், பூசை அறை வாசலில் என குறைந்த பட்சம் மூன்று தீபங்கள் ஏற்ற வேண்டும். மற்றப்படி வீட்டில் உள்ள அறைகளின் வாசல்கள் மற்ற இடங்கள் எல்லாம் வீடு தீப ஒளியில் பிரகாசமாக இருக்கும் அளவிற்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.
முறைப்படி விரதமிருந்து தீபமேற்றி வழிபடும் அனைவரின வாழ்விலும் ஒளி பிறக்கும். பரிபூரண நம்பிக்கையுடன் கடைப்பிடியுங்கள் ஒளிமயமான எதிரகாலம் நிட்சயம்.
சிந்தை மகிழ்விக்கும் சித்திரை!
சித்திரை மாதப் பிறப்பை சைத்ர விஷூ புண்ணிய காலம் என்பார்கள். ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள்; சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரையை வசந்த ருது என்பார்கள்.
அற்புதமான இந்த மாதத்தின் முதல் நாளில், திறந்தவெளியில் சூரியக் கடவுளுக்கு பூஜைகள் செய்வர். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சித்திரை முதல் நாளை புனித தினமாகக் கொண்டாடுகின்றனர். பிரம்மன் உலகைப் படைத்தது சித்திரை முதல்நாளில் என்கின்றன சில ஞான நூல்கள்.
பஞ்சாங்க படனம்
முந்தைய காலத்தில் தினந்தோறும், பஞ்சாங்கம் படிக்கச் செய்து கேட்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. தினமும் படிக்க முடியாவிடினும், வருடப் பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படிக்கும் இடத்துக்குப் போய், வரவிருக்கும் வருடத்தின் பலாபலன்களைக் கேட்க வேண்டும். இதை பஞ்சாங்க படனம் எனச் சொல்வார்கள். வருடப் பிறப்பன்று புதுப் பஞ்சாங்கத்தை பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள்.
பஞ்ச அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். தினமும் இதைப் படிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
யோகம்: ரோகங்களைப் போக்கும். திதி: நன்மையை அதிகரிக்கச் செய்யும். கரணம்: வெற்றியைத் தரும். வாரம்: ஆயுளை வளர்க்கும். நட்சத்திரம்: பாவத்தைப் போக்கும்.
மேலும், கசப்பும் இனிப்பும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் விதமாக, இல்லத்தில் வேப்பம்பூ பச்சடி செய்து சாப்பிடுவார்கள்.
குழைத்த மனமுமலர் கொண்டு குவிகையும்
இழைத்த அருச்சனையு மில்லேனை யாள்குவையோ
தழைத்த படையைச் சவுந்தரசா மந்தனுக்கா
அழைத்த புகழ்க் கூடல் அங்கயற்க ணாயகியே
- அங்கயற் கண்ணிமாலை
விஷுக்கணி
பங்குனி மாதக் கடைசி நாள் இரவில், தங்க - வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள், நவரத்தினங்கள், பழ வகைகள், காய் வகைகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதிகாலையில் எழுந்ததும், அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இது ‘விஷுக் கணி’ (விஷுக் காட்சி) எனப்படுகிறது. பிறகு கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள். சிறியவர்கள், பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். அவர்களைப் பெரியவர்கள் ஆசிர்வதிப்பார்கள். அன்றைய தினம் வயதில் சிறியவர்களுக்கும் வீட்டுக்கு வருபவர்களுக்கும் பணம் பரிசளிக்கும் வழக்கம் உண்டு. இதை ‘விஷுக் கை நீட்டம்’ என்பர்.
சித்திரை ஏகாதசிகள்
சித்திரை மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இந்த மாதத்தின் தேய்பிறை ஏகாதசி, ‘பாப மோசனிகா ஏகாதசி’ எனப் படும். இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், நம் பாவங்கள் யாவும் பொசுங்கிவிடும். சாபத்தின் காரணமாக பேயாக மாறித் திரிந்த மஞ்சுகோஷை என்ற தேவமங்கை, இந்த விரதத்தைக் கடைப்பிடித்து இறையருளால் சாபம் நீங்கப் பெற்றாள்.
சித்திரை வளர்பிறையில் வருவது ‘காமதா ஏகாதசி’ எனப் படும். விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. லலிதன் என்ற காந்தர்வன், ஒரு சாபத்தின் காரணமாக ராட்சஸ உருவை அடைந்தான். அவனது மனைவியான லலிதை, சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, கணவனின் சாபம் நீங்குவதற்கு வழி கண்டாள். விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றும் விரதம் ஆதலால் காமதா ஏகாதசி என்று பெயர்.
சித்ரகுப்த விரதம்
சித்திரை மாத வைபவங்களில் மிக முக்கியமானது சித்ரகுப்த விரதம். சித்திரை மாத வளர்பிறை அல்லது தேய்பிறை சப்தமி அன்று, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது, சித்திரகுப்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு முதல் நாளான சஷ்டி அன்று உபவாசம் இருந்து அன்று இரவு கலச ஸ்தாபனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். விரத நாளன்று அதன் மகிமையைச் சொல்லும் திருக்கதையைப் படிப்பது விசேஷம். அந்தக் கதை முருகப்பெருமானுக்கு சிவனாரால் அருளப் பெற்றது என்பார்கள்.
த்விஜவர்யர்’ என்ற வேதியர் சகல சாஸ்திர-வேதங்களிலும் தேர்ந்தவர். இருந்தாலும், அவற்றில் சொன்னவற்றை அவர் கடைப்பிடிப்பதில்லை. தான - தர்மம் என்பது அவரைப் பொறுத்தவரை புத்தகங்களில் மட்டும்தான்!
இப்படியெல்லாம் இருந்தாலும் அவரிடம் ஒரு நல்ல குணமும் இருந்தது. அவர் சாப்பிடுவதற்கு முன்னால், ‘‘சித்ராய நம: சித்ரகுப்தாய நம: யமரூபிதராய நம:’’ எனச் சொல்லி சித்திரகுப்தருக்கு பலி போடுவார். பிறகுதான் சாப்பிடுவார். த்விஜவர்யரின் மனைவி சோமாவும் நல்லதே நினைத்தது இல்லை. ஆனால், சித்திரகுப்தருக்கு உணவு இடும்போதெல்லாம் த்விஜவர்யர், சோமாவையும் கூடவே வைத்துக் கொண்டதால், அவளுக்கும் பலன் கிடைத்தது. அவர்கள் இருவரும் இறந்த பிறகு, அவர்களை யமதர்மன் முன் நிறுத்தினார்கள். சித்திரகுப்தன், ‘‘இவர்கள் சித்திரகுப்த விரதம் இருந்தார்கள்!’’ என்றான்.
‘‘இந்த இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்!’’ என்றான் யமன். விரதத்தை அறியாமல் செய்த அவர்களுக்கே அப்படியென்றால், அறிந்து செய்பவர்கள் அடையும் பலனைச் சொல்லவும் வேண்டுமா?!
சித்ரா பௌர்ணமி
செல்வங்களிலேயே பெரிய செல்வமாக இருந்து, நிம்மதியைத் தருவது நோயில்லாத வாழ்க்கையே. அதனால்தான் பதினாறு பேறு (செல்வங்)களைச் சொன்ன அபிராமிபட்டர், ‘நோயின்மை’க்கு முதல் இடம் கொடுத்தார்.
மனித குலம் நோயில்லாத வாழ்வு வாழத் தங்களையே அர்ப்பணித்தவர்கள் சித்த புருஷர்கள். சித்ரா பௌர்ணமியின் உண்மையைக் கண்டுபிடித்து, அதை மனித குலத்துக்கு வெளிப்படுத்தியவர்கள் சித்த புருஷர்களே.
சித்ரா பௌர்ணமியன்று ஒரு சில ஊர்களில் இரவில் முழு நிலா வெளிச்சத்தில், பூமியில் இருந்து ஒரு வகை உப்பு வெளிக் கிளம்பும். பூமிநாதம் என்று அழைக்கப்படும் அந்த உப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை அளிக்கக் கூடியது. இது, ரசாயன- மருத்துவத் துறையில் உபயோகப்படுகிறது. இந்த உப்பு சித்ரா பௌர்ணமி அன்று வெளிப்படுவதைக் கண்டு பிடித்தவர்கள் சித்த புருஷர்களே. இதனால் சித்ரா பௌர்ணமி ஆதியில் ‘சித்தர் பௌர்ணமி’ எனப்பட்டது.
சித்திரை வைபவங்கள்!
சித்ரா பௌர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்து கொண்டாள்.
* சித்திரை சுக்லபட்ச பஞ்சமியில்தான் ஆதிசங்கர ஜயந்தி. ஸ்ரீராமானுஜர் அவதார வைபவமும், ஸ்ரீரமணர் ஆராதனையும் சித்திரையில்தான்.
சித்திரை சுக்லபட்ச திருதியை அன்றுதான் அட்சய திருதியை கொண்டாடப் படுகிறது. யமதருமனின் கணக்கரான சித்திரகுப்தன் தோன்றியது சித்ரா பவுர்ணமி அன்றுதான்.
* சித்திரை- சுக்லபட்ச அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திருநாளில் அம்பிகையை மனமுருகி பூஜிப்பதும், நதி நீராடலும் சிறப்பாகும். சித்திரை திருவோணத்தில் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு வசந்தகால அபிஷேகம் நடைபெறும்
* கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரரும் ஸ்ரீமங்களாம்பிகையும், சித்திரை மாதம் நடைபெறும் சப்தஸ்தான விழாவுக்காக பல்லக்கில் புறப்பட்டு, சுமார் 20 கி.மீ தூரம் பயணித்து... சாக்கோட்டை, திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய ஏழு திருத்தலங்களுக்கும் சென்று திரும்புகிறார்கள். மிக அற்புதமான விழா வைபவம் இது!
* கோவை சிங்காநல்லூரில், சித்திரகுப்தருடன் யமதருமன் சேர்ந்து அருளும் தனிக்கோயில் உள்ளது. இங்கே, சித்ரா பௌர்ணமியன்று 101 வகை படையல்கள் படைத்து, பொங்கலிட்டு வெகு சிறப்பாக வழிபாடுகள் நிகழும். வராத கடன்பாக்கி வந்து சேரவும், மரண பயம் நீங்கவும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டி பலனடைகிறார்கள்.
மன்மத வருட பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் எமது முத்துமணி இணையத்தின் தமிழ் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இந்துப்பண்பாட்டின் முக்கிய கொண்டாட்டங்களின் ஒன்றான புத்தாண்டு இலங்கையில் மாத்திரமின்றி தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்படுகிறது.
ராசி மண்டல வலயத்தில் உள்ள மேச ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ் இந்துக்களின் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
சூரியன் மீண்டும் மேச ராசிக்கு வரும்வரையான காலம் ஒரு தமிழ் வருடம் எனவும் ஜோதிடம் கூறுகிறது.
இதற்கமைய ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமாக இன்று (14) மன்மத வருடம் பிறக்கின்றது
வாக்கியம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களின் அடிப்படையில் இருவேறு நேரங்களில தமிழ் சித்திரை புத்தாண்டு இன்று (14) மதியம் பிறக்கின்றது
தமிழ் ஆண்டுகளின் வரிசையில் 29ஆவது ஆண்டாக மன்மத ஆண்டு பெயரிடப்பட்டுள்ளது
மன்மத வருடத்தின் பலன் வெண்பா
மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே – மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்.
இந்த பலன் வெண்பாவிற்கு அமைய, மன்மத ஆண்டில் நன்மைகள் பல கிட்டும் ஆண்டாக இந்த ஆண்டு அமைகின்றது
மலரவிருக்கும் மன்மத வருட கரும அனுஷ்டானங்கள்
மன்மத வருடம் சித்திரை 1ம் திகதி 14.4.015 செவ்வாய்க்கிழமை பகல் நாடி 15விநாடி 12.23 அபரபக்க தசமி திதியில் அவிட்ட நட்சத்திரத்தின் 2ம் பாதத்தில் வியாகாத நாமயோகத்தில் ,விட்டிக்கரணத்தில்,கடக லக்கினத்தில்,கடக நவாம்சத்தில் இப்புதிய மன்மத வருஷம் பிறக்கின்றது.
புண்ணியகாலம்
அன்று முற்பகல் காலை 8.23 முதல் பிற்பகல் 4.3 வரை விஷு புண்ணிய காலமாகும் .
ஸ்நான முறை
இப் புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கற்பித்து மருத்துநீர் தேய்த்து சிரசில் விளா இலையும் காலில் கடம்ப இலையும் வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும்.
ஆடைகள்
வெண்மை,சிவப்பு நிறமுள்ள பட்டாடை ஆயினும் வெண்மை,சிவப்புக்கரை அமைந்த புதிய பட்டாடையாயினும் அணிய வேண்டும்.
உண்டிகள்
அறுசுவை அமைந்த உண்டிகளுடன் வேப்பம்பூ ,பொரிக்கறி,கசப்பு,என்பவை சேர்த்தருந்த வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள்
மிருகசீரிடம் ,திருவாதிரை,புனர்பூசம் 1ம்,2ம் ,3ம் கால்கள் ,சித்திரை உத்தராடம் 2ம் ,3ம்,4ம் காதல்,திருவோணம் ,அவிட்டம்,இவ் நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்ற தான தருமங்களை செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.
கை விஷேச நேரங்கள்
15.04.015
மு.ப 9.57---மு.ப 10.25 வரை
மு.ப 10.23--மு.ப 11.58 வரை
பி.ப 2.10--பி.ப 4.06 வரை
ஆதாரம்---வாக்கிய பஞ்சாங்கம்
தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை விழா
கார்த்திகை பெருநாளாம் தீபத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோயில்கள், வீடுகளில் தீபங்கள் ஏற்றப்பட்டு பிரகாசமாக ஜொலிக்கின்றன. இருள் விரட்டி ஒளி பாய்ச்சும் இந்த கார்த்திகை பெருநாள் பல்லாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவம், வைணவம், சமணம் என அத்தனையிலும் தீப வழிபாடு முக்கியப்படுகிறது.
தென் தமிழகத்தில் 16 வகை தீப வழிபாடுகள் வழக்கில் உள்ளன. இவற்றில் ‘கார்த்திகை தீபமே’ சிறப்பிடம் பிடிக்கிறது. அன்றைக்கு இயற்கையோடு நம்மவர்கள் நெருப்பையும் வணங்கி வந்திருக்கின்றனர்.
அகநானூறு, தொல்காப்பியம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரத்துடன் பொங்கையாழ்வார், ரகுவம்சத்தில் காளிதாசர், மாணிக்கவாசகர், வள்ளலார், அப்பர் பெருமான், திருமந்திரத்தில் திருமூலர் என பலரும், அத்தனை புராணங்களும் இந்த விளக்கு விழாவைப் பேசுகின்றன.
அகல், எண்ணெய், திரி, சுடர் நான்கும் ஒன்றிணையும் போது ‘விளக்கு’ ஆகிறது. இவை அறம், பொருள், வீடு எனும் குறள் நெறியை உணர்த்துகிறது. இந்த அறவொளியே தீப சக்தியாக இந்நாளில் வழங்கப்படுகிறது.
பிரம்மன், விஷ்ணுவிற்கு சிவனே முதல்வரென காட்டியது, முருகப் பெருமானின் பிறந்த தினம், அக்னி - சுவாகா தம்பதியர், சப்தரிஷி மங்கையர் பூஜித்தது, எலியாய் அவதரித்த மகாபலி சக்கரவர்த்தி வரம் பல பெற்றது, திரிசங்கு மன்னன் பகீரதனை வென்றது, பார்வதிக்கு சிவபெருமான் பாதி இடமளித்து அர்த்தநாரீஸ்வரராய் ஆக்கியது, மகிஷாசுரன் வதத்தின் போது சிதிலமடைந்த லிங்கத்தை பார்வதி பூஜித்ததென பல அற்புத நிகழ்வுகள் இந்நாளில்தான் நடந்தேறின.
இன்றும் காசி, ஹரித்துவார் பகுதிகளில் மாலை நேரத்தில் தீபமேற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் வழக்கமிருக்கிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது வழக்கில் உள்ளது. தை மாதம் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் மகரஜோதி தரிசனம் கேரளத்தில் பிரசித்தம். சிவபெருமான் ஒளிமயமாகக் காட்சி தந்ததை காட்டும் விதம் திருவண்ணாமலை உச்சியில் ஏற்றும் மகாதீபம் அளப்பரியது. ஐந்தரை அடி உயர, அகல இரும்புக் கொப்பரையில் 2 ஆயிரம் கிலோ நெய்யிட்டு முப்பது மீட்டர் காடாத் துணி சுருட்டிச் செய்த திரி போட்டு அதன் மீது 2 கிலோ கற்பூரம் வைத்து ஏற்றுகிற இத்தீபம் 35 கிலோமீட்டர் தூரத்தை வெளிச்சக் காடாக்கி விடும்.
நம்மூர்களில் காலை முதல் விரதமிருந்து மாலையில் பூஜை முடித்து வீடு முழுக்க வரிசையாக அகல் விளக்கேற்றி வைக்கும் அழகு அற்புதமானது.
மொட்டை மாடி முதல், சுற்றுச் சுவர்கள் வரை இரவில் தெருக்கள் ஜொலிக்கும். மண் விளக்கு, பித்தளை, சர விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி வழிபடுவதும், மாவிளக்கு ஏற்றுவதும் இந்நாளில் சிறப்பானது. எனினும் கால ஓட்டத்தில் அலங்கார மெழுகு வர்த்திகளுக்குள் அடங்கி விட்டதில் வருத்தம். இருப்பினும், இருள் துரத்தும் இவ்வெளிச்ச தினம் நமக்குள் கொட்டும் குதூகலம் கொஞ்சமும் குறையவில்லை என்பதே உண்மை.
திறந்தவெளியில் பப்பாளி போன்ற மரத்தண்டை நிறுத்தி அதைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகள் கட்டி வைத்து இந்த ‘சொக்கப்பனை கொளுத்துதல்’ ஒவ்வொரு கிராமத்திலும் இந்நாட்களில் இப்போதும் நடக்கிறது. சொக்கப்பனைக்கு தீபாராதனை காட்டி அதைக் கொளுத்த பனை மட்டையில் படபட ஓசையுடன் பிடித்தெறியும் தீ, இன்றைய பட்டாசுகளை தோற்கடித்து விடும்!
முருகப் பெருமானுக்கு இன்று தைப்பூசம்.
உலகம் முழுவதும் நிறைந்து வாழும் இந்துக்கள் விரதமிருந்து சிறப்பாக கொண்டாடுகின்ற
திருவிழாக்களில் முருகப் பெருமானுக்குகந்த பெருவிழா தைப்பூசமாகும்.
தைப்பிறப்பின் பின் 27 நட்சத்திரங்களில் ஒன்றான பூச நட்சத்திரம் தை மாதத்தில் கூடிவரும் நாளே தைப்பூசமாகும். இது இந்த 2014 ஆண்டின் ஜனவரி 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகும்.
நாட்டிலுள்ள சகல முருகன் ஆலயங்களிலும் பரிவார மூர்த்தியாக ஏனைய ஆலயங்களில் உள்ள முருகன் ஆலயம் முன்பாகவும் இடம்பெறுகின்றது. இன்றைய தைப்பூச நன்நாளில் எமது சுபகாரியங்களான வித்தியாரம்பம், குழந்தைகளுக்கு காது குத்தல், புதுமனை புகுதல், புதுகணக்கு ஆரம்பித்தல், புதிய தொழிற்துறை ஆரம்பித்தல் மற்றும் திருமண பொருத்தங்கள் போன்ற சுப காரிய நிகழ்வுகளுக்கு மிக சிறப்பாக நாளாக சொல்லப்படுகின்றது.
முத்துமணி இணைய வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்
இன்று 14.01.2014 தமிழர் திருநாள் .தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை மனதில் கொண்டு அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ,அனைவருக்கும் பொங்குக அனைத்து செல்வங்களும் என முத்துமணி இணையத்தின் சார்பில் பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
மற்றும் எமக்கு உணவளிக்கும் உழவர் பெருமக்களுக்கும் இயற்கை சக்தியான சூரியனுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம்..
தை பிறப்பின் சிறப்பு! - பொங்கல் விழா
தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்
தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். மக்கள் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.
கிறிஸ்மஸ் தாத்தா பிறந்த கதை
அன்பான உலகில் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ள கிறிஸ்துமஸ் திருநாளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்துபவர் சிவப்பு அங்கி அணிந்து பரிசுப் பொருட்கள் மூட்டையுடன் வரும் வெண் தாடி தாத்தாதான்.
குழந்தைகளால் அன்புடன் கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் அந்த தாத்தாவின் ஆங்கிலப் பெயர் சாந்தா கிளாஸ்.
4ம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் நிகோலாஸ் என்ற புனிதரின் நினைவாகவே சாந்தா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உருவாக்கப்பட்டார். தற்போது உலகம் முழுவதும் எல்லோரின் உள்ளங்களில் அன்பாக உலா வருகிறார் அந்த அன்பு தாத்தா.
அந்த காலத்து ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலாஸ். இளம் வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார்.
மீண்டும் லைசியா திரும்பிய நிகோலாஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார். ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார்.
ஆனால், கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.
ஆறாம் நூற்றாண்டுக்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது.
மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது. பாரியில் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேராலயத்தில் இப்போதும் அவரது நினைவுச் சின்னங்கள் உள்ளன.
காலம் உருண்டோடிவிட்டாலும் அவரது நினைவுகள் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை.ரஷ்யாவும் கிரீஸும் அவரைத் தங்களது நாட்டு பாதுகாவலராக ஏற்றுக் கொண்டன.
சமூக சேவை அமைப்புகள், குழந்தைகள், இளம் பெண்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் அவரை தங்களது பாதுகாவலராக ஏற்றுக் கொண்டனர். இது வழி வழியாக பின்பற்றப்பட்டது. அவரது பெயரில் ஐரோப்பா முழுவதும் ஆலயங்கள் உருவாகின.
டச்சு யாத்திரிகள் மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் அவரது புகழ் பரவியது. செயின்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர். காலப் போக்கில், சமுதாயத்தில் தீமை செய்யும் குழந்தைகளுக்கு தண்டனையும் நன்மை செய்யும் குழந்தைகளுக்கு பரிசுகளும் அளிக்கும் தாத்தாவாக அவர் உருவகப்படுத்தப்பட்டார்.
1822ல் கிளமென்ட் மூர் என்பவர் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி வர்ணித்திருந்தார். அது பத்திரிகைகளில் வெளியாக மிகவும் பிரபலமடைந்தது.
புனிதர் நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு - வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார். அவரின் பிரவேசம் அப்பகுதியில் அன்பு, மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது . நாமும் கிறிஸ்துமஸ் தாத்தாவை வரவேற்று அன்பையும் மகிழ்ச்சியையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வோம்.
இன்று மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் அதாவது இன்று தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.
இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள்.
இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள்.
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
















.jpg)


.jpg)











.png)
+-+Copy.png)

